போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Jun 2018 11:30 PM GMT (Updated: 26 Jun 2018 10:39 PM GMT)

வேலூரில் நடந்த சர்வதேச போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர்,

வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மது அடிமைகள் மறுவாழ்வு மைய செயலாளர் டாக்டர் வெங்கடர்த்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதை பொருள் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராமன் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊரீசு பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணாசாலை வழியாக வேலூர் கோட்டை முன்பாக உள்ள காந்திசிலை அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில், ஊரீசு பள்ளி, முஸ்லிம் பள்ளி, வெங்கடேஸ்வரா பள்ளி, பாரத் மெட்ரிக் பள்ளி, முத்துரங்கம் கலை, அறிவியல் கல்லூரி, ஆக்சீலியம் பெண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள், இந்தியன் செஞ்சிலுவை சங்கம், பள்ளி கல்வித்துறை, நாட்டு நலப்பணி குழுக்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு புகைப்பிடிக்க கூடாது, மது அருந்தகூடாது, போதை பொருள் பயன்படுத்த கூடாது போன்ற பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

முன்னதாக கலெக்டர் ராமன், போதை பொருள் ஒழிப்பு குறித்து மாவட்ட அளவில் நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து சிறந்த வார்த்தை அமைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஊர்வலத்தில், கலால் உதவி ஆணையர் பூங்கொடி, கலால்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், செஞ்சிலுவை சங்க செயலாளர் இந்தர்நாத், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story