படவேடு செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைப்பு செய்ய ரூ.34 கோடி ஒதுக்கீடு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தகவல்


படவேடு செண்பகத்தோப்பு அணையை  மறுசீரமைப்பு செய்ய ரூ.34 கோடி ஒதுக்கீடு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2018 9:45 PM GMT (Updated: 30 Jun 2018 7:36 PM GMT)

படவேடு செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைப்பு செய்ய ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.

கண்ணமங்கலம்,

படவேடு செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைப்பு செய்ய ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணையை நேற்று கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘படவேடு செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைப்பு செய்ய உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். இதன்மூலம் செண்பகத்தோப்பு அணையில் இயங்காமல் உள்ள 7 ஷட்டர்கள் ரூ.16 கோடியே 37 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ளது.

மேலும் கரையை பலப்படுத்தி அணையை சுற்றியுள்ள முள்வேலி மரங்களை அகற்றி பூங்கா அமைக்கவும், ஆலியாபாத், காமக்கூர், வெள்ளூர் மற்றும் எஸ்.வி.நகரம் ஆகிய பகுதிகளில் பழுதடைந்துள்ள அணைக்கட்டு பகுதிகளை ரூ.17 கோடியே 67 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்றார்.

முன்னதாக படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், படவேடு தாமரை ஏரி அருகே சைக்கிள் பார்க்கிங் அமைக்க ரூ.4 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மகாதேவன், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் கவுன்சிலர் துரை, ஊராட்சி செயலாளர்கள் குப்பம் மனோகரன், படவேடு அன்பழகன், கிளை செயலாளர் சங்கர் உள்பட கலந்துகொண்டனர்.

Next Story