தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையை கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி


தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையை கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 30 Jun 2018 10:45 PM GMT (Updated: 30 Jun 2018 8:57 PM GMT)

தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.

திருவள்ளூர்,

தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.

திருவள்ளூரை அடுத்த பாண்டூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் சின்னராசு என்கிற ராபின்சன் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவருக்கு லிடியா(20) என்ற மனைவியும், இனியா (3) மற்றும் குஷி என்ற 8 மாத பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சின்னராசு வேலையின் காரணமாக வெளியில் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி லிடியா தன்னுடைய குழந்தைகள் இனியா, குஷி மற்றும் மாமியார் குட்டி, மாமனார் கோட்டீஸ்வரன் ஆகியோருடன் காற்றுக்காக கதவை திறந்து வைத்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

இரவு 3½ மணியளவில் லிடியா எழுந்து பார்த்தபோது அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவரது 8 மாத குழந்தை குஷியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தனது மாமனார், மாமியாரை எழுப்பி தகவல் சொன்னார். அவர்கள் குழந்தையை வீட்டின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் ஓடி வந்து குழந்தையை தேடினார்கள். அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் அருகே உள்ள செங்கல்சூளை அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டது.

அதைத்தொடர்ந்து லிடியா குடும்பத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது அங்கு அவரது குழந்தை கழுத்து மற்றும் 2 காதுகளில் கத்தியால் அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு கதறி அழுதனர். உடனடியாக குழந்தையை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். குழந்தைக்கு 20 தையல் போடப்பட்டது.

இது குறித்து லிடியா தன் குழந்தையை கடத்திச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story