குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 1 July 2018 10:45 PM GMT (Updated: 1 July 2018 10:16 PM GMT)

குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே மாதம் இறுதியில் சீசன் தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில்தான் சீசன் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சீசன் தொடங்கிய நாளில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சாரல் மழை இல்லை. வெயில் அடித்தது. இருந்த போதிலும் குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியதுடன் இதமான சூழல் காணப்பட்டது.

அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் குளித்து முடித்த சுற்றுலா பயணிகள் படகு குழாமையும் விட்டு வைக்கவில்லை. குடும்பத்துடன் படகு குழாமுக்கு சென்று தங்களுக்கு விருப்பமான படகில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அனைத்து அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் கார், ஆட்டோ, வேன்கள், இருசக்கர வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். அப்படி இருந்தும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story