மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்: பல்லடத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி


மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்: பல்லடத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 1 July 2018 11:03 PM GMT (Updated: 1 July 2018 11:03 PM GMT)

அன்னூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பல்லடத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

அன்னூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அண்ணாநகரில் வசிப்பவர் குருவாயூரப்பன். இவருடைய மகன் நிசாந்த் (வயது 22). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

பல்லடம் மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் ஷநவாஸ். இவருடைய மகன் இஸ்மாயில் (22) இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர்கள் 2 பேரும் நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி நிசாந்த், இஸ்மாயில் ஆகியோர் தங்களது நண்பர்கள் 6 பேரும் நேற்று அதிகாலை 1 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டனர். அவர்கள் 8 பேரும் சேர்ந்து 4 மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்றனர். ஒரு மோட்டார்சைக்கிளை நிசாந்த் ஓட்டினார். அதில் பின்புறம் இஸ்மாயில் அமர்ந்து இருந்தார்.

அன்னூர் அருகே குருக்கிளையம்பாளையம் அருகே சென்ற போது மேட்டுப் பாளையத்தில் இருந்து அவினாசி நோக்கி வந்த வேன் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்த நிசாந்த், இஸ்மாயில் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்து அவர்களுடன் சென்ற மற்ற நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நிசாந்த், இஸ்மாயில் ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story