ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கோவில் வளாகத்தில் வி‌ஷம் குடித்து மைசூரு காதல் ஜோடி தற்கொலை திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பால் விபரீதம்


ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கோவில் வளாகத்தில் வி‌ஷம் குடித்து மைசூரு காதல் ஜோடி தற்கொலை திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பால் விபரீதம்
x
தினத்தந்தி 6 July 2018 10:00 PM GMT (Updated: 6 July 2018 10:09 PM GMT)

ஸ்ரீரங்கப்பட்டணா அருகே, திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் வளாகத்தில் மைசூருவை சேர்ந்த காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

மண்டியா,

ஸ்ரீரங்கப்பட்டணா அருகே, திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் வளாகத்தில் மைசூருவை சேர்ந்த காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா எடியாலா கிராமத்தை சேர்ந்தவர் சிவு (வயது 19). அதே பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா (18). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதை அறிந்த 2 பேரின் பெற்றோர்களும், காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வெளியே செல்ல அனுமதிக்காமல் 2 பேரையும் வீட்டினுள் அவர்களது பெற்றோர் வைத்திருந்தனர். இதனால் காதல் ஜோடியான சிவு–அன்னபூர்ணா மனம் உடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் நேற்று சிவு, அன்னபூர்ணா ஆகியோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா சிக்கராயரஹள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர்.

வி‌ஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை

அப்போது அவர்கள், காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், நாம் இருவரும் வாழ்க்கையில் சேர முடியாது. எனவே இருவரும் ஒன்றாக சேர்ந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று முடிவு செய்தனர். அதன்படி இருவரும் வி‌ஷத்தை குடித்தனர்.

இதனால் சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளியபடி சிவு பரிதாபமாக உயிரிழந்தார். அன்னபூர்ணா வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கோவிலுக்கு சென்ற சிலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அன்னபூர்ணாவை அவர்கள் மீட்டு மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கே.ஆர்.எஸ். போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்த சிவு, அன்னபூர்ணாவின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையில், காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி கே.ஆர்.எஸ். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story