பர்ஸ் ‘இளைக்காமல்’ காக்கும் வழிகள்!


பர்ஸ் ‘இளைக்காமல்’ காக்கும் வழிகள்!
x
தினத்தந்தி 7 July 2018 9:50 AM GMT (Updated: 7 July 2018 9:50 AM GMT)

பண நெருக்கடி ஏற்பட்டுத் தவிக்கும் சூழ்நிலை இனி எப்போதும் ஏற்படக் கூடாது.

பணம் எப்போதும் நம் செலவுக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ‘மாதக் கடைசி ஞானோதயம்’ பலருக்கும் பிறக்கும்.

ஆனால் சம்பளம் பெற்று கையில் பணம் புரளத் தொடங்கியதுமே அந்த ஞானோதயம் பறந்துவிடும். விளைவு, மாதக் கடைசியில் பர்ஸ் வறண்டுபோகும் நிலை.

சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், எப்போதுமே பணப் பற்றாக்குறையால் தவிக்கும் நிலை ஏற் படாது.

அவை பற்றி...

• நாம் திடீரென்று, கண்ணில் பட்டு நம்மை ஈர்த்த பொருளை வாங்கிவிடுவோம். எனவே எந்தப் பொருளையும் வாங்கும் முன், அது உடனடியாகத் தேவையானதுதானா அல்லது அப்பொருளை வாங்குவதைத் தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முடியுமா என்று ஒரு சில நிமிடங்கள் யோசியுங்கள். இப்படி சிறிதுநேரம் யோசித்தாலே நிறைய செலவுகளைத் தவிர்த்துவிட முடியும். ஒரு ஆசையில் வாங்கி, வீட்டில் வீணாகப் போட்டுவைத்திருக்கும் பொருட்களைப் பற்றிய காட்சியை ஓரிரு நிமிடம் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்.

• பணத்தாள்களாகச் செலவழிப்பதைவிட, கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கும்போது நாம் இயல்பாகவே அதிகம் செலவழித்துவிடுகிறோம். அப்போதைக்கு கையில் இருந்து நாம் கொடுப்பதில்லை என்று எண்ணுவதே காரணம். எனவே, கூடுமானவரை கிரெடிட் கார்டு பயன்பாட்டைக் குறையுங்கள்.

• சில சீசன்களில் சில பொருட்களின் விலை கூடும், சில பொருட்களின் விலை குறையும். அதற்கேற்ப நாம் பொருட்களை வாங்கினால் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

• புகை, மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம், செலவை மட்டுமல்ல, உடல்நலத்தையும் காக்கலாம்.

இந்த யோசனைகளைப் பின்பற்றிப் பாருங்கள்... உங்கள் பர்ஸ் எப்போதும் ‘புஷ்டி’யாக இருக்கும்! 

Next Story