தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை 4-வது நாளாக நீடிப்பு


தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை 4-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 8 July 2018 11:15 PM GMT (Updated: 8 July 2018 6:38 PM GMT)

சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது.

எலச்சிபாளையம்,

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகளை, திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஷ்டி பிரைடு கிராம் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் சத்துணவு முட்டை வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு, இந்த தனியார் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடந்தது.

இதில் குமாரசாமியின் வீடு மற்றும் ஆடிட்டரின் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் சோதனை மற்றும் விசாரணையை முடித்துக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது. மேலும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையும் நடைபெற்றது.

இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதேபோல தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வந்த வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என தெரிகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே இதுகுறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

திருச்செங்கோடு பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story