ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்


ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 8 July 2018 10:45 PM GMT (Updated: 8 July 2018 6:48 PM GMT)

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் நடந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில் காலி ஏற்படும் நிலையில் சம நிலையில் பணிபுரியும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் களாக நியமனம் செய்ய வேண்டும். நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் கூடுதலாக கல்வி மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வினை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்திட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொழிற்பிரிவு புத்தகம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் மலையாள வழி பாட புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஊதிய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திடவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவதை போல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு தனி ஊதியமாக ரூ.2,500 வழங்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொது செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கணேசன், மாநில துணை செயலாளர் ராஜாஜெகஜீவன், மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story