பிரதமர் மோடி வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தப்பியவர்களை பிடித்து வராதது ஏன்? திருநாவுக்கரசர் கேள்வி


பிரதமர் மோடி வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தப்பியவர்களை பிடித்து வராதது ஏன்? திருநாவுக்கரசர் கேள்வி
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 7:35 PM GMT)

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பிய வர்களை பிடித்து வராதது ஏன்? என கரூரில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.

கரூர்,

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் கரூர் கோவை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர்கள் வேலுமணி, ஜோதிமணி, மாநில மகளிரணி தலைவி ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ராகுல் காந்தி அலை வீச தொடங்கி விட்டது. வருகிற தேர்தலில் நாம் கூட்டணி வைக்கும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். ராகுல் காந்தி வருகிற தேர்தலில் பிரதமர் ஆவார். கச்சாஎண்ணை விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை குறையவில்லை. இன்னும் சில மாதங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ எட்டிவிடும். ஏழைகளின் சிரமங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் விவசாய கடன், படிப்புக்காக கடன் வாங்கியவர்களை வஞ்சித்து விட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ்மோடி, விஜய்மல்லையா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. உலகம் சுற்றும் வாலிபனாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்மேற் கொள்ளும் பிரதமர் மோடி அவர்களை பிடித்து வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கூட்டத்தில் வருகிற 2019-ல் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும் தொழில்துறையை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினை மாற்றி அமைப்பது, காமராஜர் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அமுதா சுப்ரமணியன், முன்னாள் எம்.பி. விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெட்டி, படுக்கையுடன் சென்று போராட்டம் நடத்திய சுரேகா பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னதாக கூட்டம் நடந்து கொண்டிருந்த போது வந்து மாநில தலைவரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story