காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜீப், மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தல், 2 பேர் கைது


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜீப், மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தல், 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2018 9:45 PM GMT (Updated: 9 July 2018 7:18 PM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே திருப்பருத்திகுன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்ததாக திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்த ஏழுமலை(வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.

திருவள்ளூர் தாலுகா போலீசார், திருவள்ளூரை அடுத்த சேலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு ஜீப்பை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த சேலை கண்டிகையை சேர்ந்த கபாலி (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீசார், பிஞ்சிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மணல் கடத்தி வந்த பதிவெண் இல்லாத ஒரு மோட்டார் சைக்கிளையும், புட்லூர் கூவம் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செவ்வாப்பேட்டை போலீசார், அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினார்கள்.

இந்த 2 மோட்டார் சைக்கிள்களிலும் மணல் கடத்தி வந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story