கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 134 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 134 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 7:37 PM GMT)

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 134 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கிராம ஊராட்சி செய லாளர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மற்றும் மதிப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கம்ப்யூட்டர் உதவியாளர்கள், முழுசுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கும் பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 3-ந் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கரூர், தாந்தோன்றிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ண ராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய 8 ஒன்றியங்களிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி பிரிவு, மாவட்ட ஊராட்சி தணிக்கை பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் பல்வேறு பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தம் தலைமையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் உள்பட 134 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 26 பேர் பெண்கள் ஆவர். பின்னர் கைதானவர்கள் கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story