வில்லிவாக்கத்தில் விதிமுறை மீறல்: பள்ளிக்கூட நுழைவுவாயில் எதிரிலேயே மதுக்கடை


வில்லிவாக்கத்தில் விதிமுறை மீறல்: பள்ளிக்கூட நுழைவுவாயில் எதிரிலேயே மதுக்கடை
x
தினத்தந்தி 9 July 2018 11:30 PM GMT (Updated: 9 July 2018 8:17 PM GMT)

வில்லிவாக்கத்தில் பள்ளிக்கூட நுழைவுவாயில் எதிரிலேயே செயல்பட்டு வரும் மதுக்கடையால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங் கள் ஆகியவற்றின் அருகே மதுபான கடைகள் இருக்கக் கூடாது என்பது ஐகோர்ட்டின் உத்தரவு ஆகும். ஆனால் இந்த உத்தரவை மீறும் வகையில் பல இடங்களில் ‘டாஸ்மாக்’ கடைகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது.

அந்த வகையில் சென்னை வில்லிவாக்கம் தெற்கு மாடத்தெருவில் உள்ள அரசு உதவி பெறும் எஸ்.கே.டி.டி. பள்ளிக்கூடத்தின் நுழைவுவாயில் எதிரே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

மதியம் 12 மணிக்கு கடை திறந்தவுடன், மதுபிரியர்களின் கூட்டம் அங்கு அலைமோதுகிறது. மதுபாட்டில்களை ஒருவருக்கொருவர் முண்டியடித்து வாங்குகிறார்கள். சில நேரங்களில் தகராறு சம்பவங்களும் நடக்கிறது. அப்போது குடிமகன்கள் தரம் குறைந்த தகாத வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்கிறார்கள். மது போதையின் உச்சத்தில் ஆடைகள் இல்லாமலும், சில குடிமகன்கள் பள்ளியின் அருகிலேயே விழுந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இரவு நேரத்தில் பள்ளிக்கூடத்தின் அருகே அமர்ந்து குடிமகன்கள் பலரும் மதுபானத்தை அருந்துகிறார்கள். பின்னர் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் போன்ற கழிவு பொருட்களையும் அப்படியே பள்ளிக்கூடம் அருகே போட்டு விட்டு சென்றுவிடுகிறார்கள். பள்ளிக் கூடத்தில் சுமார் 600 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் காலையில் கல்வி பயிலுவதற்காக வரும்போது, அதனை தாண்டி தான் பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டிய துரதிருஷ்டமான சூழல் உள்ளது.

பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயில் அருகே குடிமகன்களால் வீசப்படும் கழிவு பொருட்களை அகற்றுவதற்கே பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு பெருத்த சிரமம் ஏற்படுகிறது. பள்ளியின் முதல் தளத்தில் உள்ள வகுப்புகளில் இருந்து, பாரில் குடிமகன்கள் குடித்துவிட்டு, கும்மாளம் போடும் காட்சியை மாணவர்கள் பார்க்க நேரிடுகிறது. இது மாணவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் பல முறை புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிவிட்டு, பாட வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்களை பின்புறமாக உள்ள வழியாக அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மதுபானத்தை நுழைவுவாயில் வழியாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சென்று தைரியமாக குடிப்பதும், பள்ளியில் இருந்து பின்பக்கம் வழியாக மாணவர்கள் கூனி, குறுகி செல்லும் நிலையும் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. இது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே காட்டுகிறது. எனவே கவலை அளிக்கும் வகையில் இருக்கும் இந்த மதுக்கடையை மூடிவிட்டு, மாணவர்களின் வாழ்வில் தமிழக அரசு ஒளி ஏற்றவேண்டும் என்பதே அப்பகுதியை சேர்ந்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் காமராஜர் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடங்களை திறந்தார். ஆனால் தற்போது குடிப்பதற்காக மதுக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட மதுக்கூடங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது என்பதே ஒரு புறம் வேதனை அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் அருகிலேயே மதுக்கூடங்கள் செயல்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.

மதுவால் சமூக சீரழிவுகள் அதிகரித்து வரும் வேளையில், பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை செயல்படுவது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிதைத்துவிடும். எனவே பள்ளிக்கூடம் அருகே செயல்படும் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story