அரசு அனுமதியின்றி ஆதார் தகவல்களை யாரும் பதிவிறக்கம் செய்யக்கூடாது கலெக்டர் எச்சரிக்கை


அரசு அனுமதியின்றி ஆதார் தகவல்களை யாரும் பதிவிறக்கம் செய்யக்கூடாது கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 9:31 PM GMT)

அரசு அனுமதியின்றி ஆதார் தகவல்களை யாரும் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் வருகிற 13-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி நாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஐ.டி.ஐ. மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வேலைவாய்ப்பு அலுவலகம் முன் இருந்து தொடங்கிய இந்த பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பேரணியானது ராமன்புதூர் வரை சென்று விட்டு மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை வந்தடைந்தது.

இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பேரணியை தொடங்கி வைத்த கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் மையங்கள் செயல்படுகிறதா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். போலியாக வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு தற்போது சிக்கியவர்களுக்கு பின் யார் இருந்தாலும் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரசின் அனுமதியின்றி ஆதார் தகவல்களை யாரும் பதிவிறக்கம் செய்யக்கூடாது. பொதுமக்களும் இத்தகைய மையங்களுக்கு செல்லும்போது அந்த மையம் அரசின் அனுமதி பெற்று தான் செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக எப்போது வேண்டுமானாலும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் அதிகமானோர் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார். 

Next Story