பள்ளி பஸ், வாய்க்காலில் இறங்கியதில் 19 மாணவ-மாணவிகள் காயம்


பள்ளி பஸ், வாய்க்காலில் இறங்கியதில் 19 மாணவ-மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 9:32 PM GMT)

நன்னிலம் அருகே பள்ளி பஸ், வாய்க்காலில் இறங்கியதில் மாணவ- மாணவிகள் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளி பஸ் ஒன்று நேற்று காலை சென்றது. பல்வேறு இடங்களுக்கு சென்று மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு காலை 9 மணியளவில் நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலத்தை அடுத்த அஞ்சு ஊரார் வாய்க்கால் அருகே வந்து கொண்டு இருந்தது.

அப்போது பஸ்சின் முன்சக்கரத்தையும், ஸ்டியரிங்கையும் இணைக்கும் கம்பி திடீரென்று உடைந்தது. உடனே பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள வாய்க்காலில் இறங்கி ஓரமாக இருந்த தென்னைமரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவ- மாணவிகள் 19 பேர் காயம் அடைந்தனர். மற்றும் டிரைவர் மகேந்திரன் (வயது 48), உதவியாளர் ஜெயசித்ரா(30) ஆகியோரும் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இவர்களில் டிரைவர் மகேந்திரன், மாணவி நிஷா(11), நிவேதா(13), ராம்குமார்(9), நிரஞ்சனா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, நன்னிலம் தாசில்தார் பரஞ்சோதி ஆகியோர்நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story