கிராமத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மனு


கிராமத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 9:32 PM GMT)

சித்தனேந்தல் கிராமத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனாமுகமது தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் இருந்து மச்சுவாடி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதேபோல புதுக்கோட்டை சிறைச்சாலை முதல் அண்ணாசிலை வரை மாநில நெடுஞ்சாலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினம் சித்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், சித்தனேந்தல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே பகுதியில் மற்றொரு டாஸ்மாக் கடை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து நாங்கள் போராட்டங்கள் நடத்தினோம். இதையடுத்து தாசில்தார் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு உடன்பாடு ஏற்படாததால் நாங்கள் கையெழுத்து போடவில்லை. தற்போது எங்களுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பொன்னமராவதி தாலுகா மறவாமதுரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. அந்த கண்மாய் பகுதியில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆழ்துளை குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சங்கம்பட்டி கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் தரும் ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. இதனால் எங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களுக்கு வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இதேபோல புதுக்கோட்டை அசோக்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்களுக்கு பாலன்நகர் குடிசை மாற்று வாரிய புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இதேபோல இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமியின் பெயரை வைக்க வேண்டும். மருத்துவ கல்லூரிக்கு நடமாடும் ரத்த வங்கி வாகனம் வழங்க வேண்டும். உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். என கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

Next Story