அமெரிக்க டாலர் தருவதாக கூறி டாக்சி டிரைவரிடம் ரூ.3½ லட்சம் அபேஸ்


அமெரிக்க டாலர் தருவதாக கூறி டாக்சி டிரைவரிடம் ரூ.3½ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 9 July 2018 10:07 PM GMT (Updated: 9 July 2018 10:07 PM GMT)

அமெரிக்க டாலர் தருவதாக கூறி டாக்சி டிரைவரிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை அபேஸ் செய்த பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

நவிமும்பை வாஷியை சேர்ந்தவர் சயிப் சப்பீர் சேக் (வயது50). டாக்சி டிரைவர். அண்மையில் இவருக்கு 2 பெண்கள் உள்பட 3 பேர் அறிமுகமானார்கள். அவர்கள் தங்களிடம் ரூ.16 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதை குறைந்த விலைக்கு தர விரும்புவதாக தெரிவித்தனர்.

இதை நம்பிய சயிப் சப்பீர் சேக் தன்னிடம் அந்த அமெரிக்க டாலர்களை தரும்படி கேட்டு உள்ளார். இதற்காக அவர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்கள் உள்பட 3 பேரும் சம்மதம் தெரிவித்தனர். இதன்படி சம்பவத்தன்று கோபர்கைர்னே பகுதியில் அவர்கள் 3 பேரையும் சந்தித்த சயிப் சப்பீர் சேக் தான் கொண்டு வந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட 3 பேரும், ரூ.16 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் இருப்பதாக கூறி, தாங்கள் கொண்டு வந்த துணியில் சுற்றிய ஒரு பொட்டலத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். அந்த பொட்டலத்தை பிரித்தபோது, அதற்குள் வெற்று காகிதங்கள் இருந்ததை பார்த்து சயிப் சப்பீர் சேக் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பதறிப்போன அவர் சம்பவம் குறித்து கோபர்கைர்னே போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயிப் சப்பீர் சேக்கிடம் மோசடியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story