பள்ளிகளில் மாணவர்கள் புத்தகம் வாசிக்க தனி அறை அமைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


பள்ளிகளில் மாணவர்கள் புத்தகம் வாசிக்க தனி அறை அமைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 10 July 2018 11:15 PM GMT (Updated: 10 July 2018 6:56 PM GMT)

பள்ளிகளில் மாணவர்கள் புத்தகம் வாசிக்க தனி அறை அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அரியலூர்,

அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 4-ம் ஆண்டு புத்தக திருவிழா அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன், அக்பர் ஷரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக கண்காட்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிட வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தகம் வாசிக்க தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு அனைத்து விதமான புத்தகங்களையும் வைத்து கட்டாயம் மாணவ-மாணவிகள் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டு தமிழக முதல்-அமைச்சரின் அனுமதியுடன் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புத்தக திருவிழாவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சந்திரகாசி எம்.பி., ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு நிறுவனர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நல்லப்பன் நன்றி கூறினார். திருச்சி கலைக்காவிரி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முதல் தொடங்கிய புத்தகதிருவிழா வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. 

Next Story