சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை: மாட்டு கொட்டகை இடிந்து பெண் பலி - 5 வீடுகள் சேதம்


சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை: மாட்டு கொட்டகை இடிந்து பெண் பலி - 5 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 10 July 2018 10:00 PM GMT (Updated: 10 July 2018 7:31 PM GMT)

சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். மேலும் 5 வீடுகள் சேதமடைந்தன.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா, மூடிகெரே ஆகிய பகுதிகளில் பலத்த மழையாக கொட்டி வருகிறது. இந்த பலத்த மழையால் துங்கா, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கனமழைக்கு பெண் ஒருவர் பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிக்கமகளூரு தாலுகா கம்பிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி வனஜா(வயது 48). இவர் நேற்று முன்தினம் தான் வளர்த்து வரும் பசுமாட்டை கொட்டகையில் கட்ட சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டி ருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மாட்டு கொட்டகை திடீரென இடிந்து விழுந்தது.

இதில் மாட்டு கொட்டகையின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த வனஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு சிக்கமகளூரு தாசில்தார் சிவண்ணா விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் பலியான வனஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசிடம் இருந்து நிவாரண நிதி பெற்றுத் தருவதாக கூறினார். மாட்டு கொட்டகை இடிந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் பெய்த மழைக்கு சிக்கமகளூரு தாலுகா ஜாக்ரா பகுதியில் 4 வீடுகள் சேதமடைந்தன. மேலும் நேற்று பெய்த பலத்த மழைக்கு கொப்பா தாலுகா தேவரமனே கிராமத்தை சேர்ந்த ரகு என்பவரது வீடும் இடிந்தது. இந்தநிலையில் சிக்கமகளூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள், ஏரிகள் நிரம்பி உள்ளன. இந்த தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Next Story