5-வது நாளாக அடைமழை: 407 விமானங்கள் தாமதம், 140 ரெயில்கள் ரத்து - மராட்டியத்தில் கனமழைக்கு 7 பேர் பலி


5-வது நாளாக அடைமழை: 407 விமானங்கள் தாமதம், 140 ரெயில்கள் ரத்து - மராட்டியத்தில் கனமழைக்கு 7 பேர் பலி
x
தினத்தந்தி 10 July 2018 11:30 PM GMT (Updated: 10 July 2018 10:35 PM GMT)

மராட்டியத்தில் 5-வது நாளாக நேற்று பெய்த கனமழைக்கு 7 பேர் பலியானார்கள். மும்பை நகரம் தொடர்ந்து வெள்ளத்தில் மிதப்பதால் ரெயில், விமான சேவைகள் முடங்கின.

மும்பை,

மராட்டியத்தில் தீவிரமடைந்து பெய்து வரும் பருவமழை மாநில தலைநகர் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்களாக சூரியனை தலை காட்ட விடாமல் மழை வெளுத்து வாங்கியது.

கொட்டி தீர்த்து வரும் பேய் மழையால் மும்பை பெருநகரம், தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிய முடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. நகர பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக மும்பையில் இந்துமாதா, பரேல், கிங்சர்க்கிள், குர்லா, சயான், பாண்டுப், விக்ரோலி, முல்லுண்டு, தாதர் மற்றும் போரிவிலி உள்ளிட்ட இடங்களில் இடுப்பளவு வரை வெள்ளம் தேங்கி நிற்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிராஸ்ரோடு, சோசியல்நகர், மாகிம் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி அல்லல் பட்டு வருகிறார்கள்.

சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நேற்றும் சாலை, ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு விரைவு சாலைகள், கிழக்கு தனிவழிச்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மணிக்கணக்கில் வாகனங்களில் தவித்தனர்.

மும்பையின் போக்குவரத்து உயிர் நாடியான மின்சார ரெயில் சேவை நேற்று மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது. மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் ரெயில்கள் ஊர்ந்தபடி சென்றன. சிக்னல் கிடைக்காமல் பல இடங்களில் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதன் காரணமாக பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி ரெயில்களில் சிறைபட்டு கடும் சிரமத்துக்குள்ளானார்கள். மெயின் வழித்தடத்தில் காட்கோபர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.10 மணிக்கு வந்த ஒரு விரைவு மின்சார ரெயில் தாதர் ரெயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.15 மணிக்கு தான் வந்தடைந்தது. வழக்கமாக இவ்விரு ரெயில் நிலையங்களுக்கும் இடையே விரைவு மின்சார ரெயிலில் பயணிப்பதற்கு 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

மேற்கு ரெயில்ேவ வழித்தடத்தில் உள்ள நாலச்சோப்ரா ரெயில் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம் மற்றும் வசாய் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சர்ச்கேட்டில் இருந்து பயந்தர் வரை மட்டுமே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

பயந்தர்- விரார் இடையே ரெயில் ேசவைகள் அடியோடு முடக்கப்பட்டு இருந்தன. ஏ.சி. மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே 40 நீண்டதூர ரெயில் சேவைகளை ரத்து செய்தன. மேலும் சில ரெயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டு இருந்தன. மழை வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

துறைமுக வழித்தடத்தில் நேற்று இரவு மான்கூர்டு- கோவண்டி இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி. - பன்வெல் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். மோசமான வானிலை காரணமாக 407 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதில், மும்பையில் இருந்து புறப்படும் 318 விமானங்கள் சராசரியாக 53 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதுபோல் வெளியூர்களில் இருந்து மும்பைக்கு வந்த 89 விமானங்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்து சேர்ந்தன.

சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக 14 வழித்தடங்களில் இயக்கப்படும் பெஸட் பஸ்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து 5-வது நாளாக நீடித்த மழையால் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை போல மீண்டும் ஒரு பெருவெள்ள பாதிப்பை மும்பை பெருநகரம் சந்தித்து விடுமோ என்ற அச்சம் மும்பைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் இதுவரை மிகப்பெரிய அளவில் எந்தவொரு மோசமான பாதிப்பும் ஏற்படாமல் 5 நாள் மழையையும் மும்பை பெருநகரம் சமாளித்துவிட்டது.

இதற்கிடையே, நேற்று மும்பையை புயல் தாக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை முற்றிலுமாக மறுத்த மும்பை மாநகராட்சி, இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டு உள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழையால் பால்கர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து உள்ள வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கி உள்ளது. தானே, பால்கர் மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

யவத்மால் மாவட்டத்தில் கனமழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு 29.9 செ.மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 4 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் புசாத் தாலுகா பான்சி கிராமத்தை சேர்ந்த விகாஸ் அனில் அக்லாவே(வயது 19), வினோத் லஷ்மன் விலால்(35), வாணி தாலுகா பேட்டுரை சேர்ந்த சுனில் சுபாஸ் போயர்(27), கேலாப்பூர் தாலுகா கோண்டி பகுதியை சேர்ந்த அனில் மோரேஷ்வர் பவார்(26) ஆகியோர் ஆவர்.

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியை சேர்ந்த சிறுவன் விஷால்(15), மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் நண்பர்களுடன் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
தானே மாவட்டம் பிவண்டியில் மழை நீர் தேங்கிய சாலையில் சென்ற லாரி நிலை தடுமாறி அருகில் சென்று கொண்டு இருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பால்கர் மாவட்டம் விராரில் நிரம்பிய குளத்தில் மூழ்கி ராகேஷ் (30) என்பவர் உயிரிழந்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை கொலபாவில் 16.5 செ.மீ., சாந்தாகுருசில் 18.4 செ.மீ., நவிமும்பையில் 14.9 செ.மீ., தானேயில் 18.6. செ.மீ., பால்கரில் 24 செ.மீ., அலிபாக்கில் 11 செ.மீ., தகானுவில் 7 செ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது.


Next Story