மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 July 2018 11:00 PM GMT (Updated: 11 July 2018 3:07 PM GMT)

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த வெள்ளாந்திமலை பகுதியை சேர்ந்த பாலன் மகன் ராஜேஷ் (வயது 21). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியாக நடந்து சென்ற 10–ம் வகுப்பு மாணவியை நோட்டமிட்ட அவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். பின்னர் திடீரென மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி ரப்பர் தோட்டத்தில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டுக்கு கொண்டு சென்றார்.

அந்த வீட்டில் வைத்து மாணவியை ராஜேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். மேலும் மாணவி சார்பில் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 29.4.2015 அன்று நடந்தது.

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு குழித்துறை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், ராஜேசை குற்றவாளி என அறிவித்தார். மேலும் அவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் மாணவி சார்பில் அரசு வக்கீல் மீனாட்சி ஆஜரானார்.

Next Story