வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருட்டு வாலிபர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 July 2018 10:15 PM GMT (Updated: 11 July 2018 7:37 PM GMT)

பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலியை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தச்சம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது உறவினரின் ஊரான நெற்குப்பையில் நடந்த திருவிழாவிற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து செல்வம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் பொன்னம ராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயினை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தச்சம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (30)என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் செல்வம் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story