ஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்


ஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 July 2018 11:00 PM GMT (Updated: 11 July 2018 8:31 PM GMT)

ஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மன்னார்குடியில் திவாகரன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகம், ஊழல் மிகுந்த மாநிலம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதையாக உள்ளது. ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசாகும். அமித்ஷா மேடையில் பேசுவதைப்போல ஊழலை கட்டுப்படுத்தவும் முன்வர வேண்டும்.

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகம் என்றனர். தற்போது தேர்தலுக்காக தமிழகத்தில் தான் ஊழல் அதிகம் என்கின்றனர்.

நாட்டை ஆளும் தேசிய கட்சியின் தலைவர் தமிழகத்துக்கு வந்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதிலளிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தலை அண்ணா திராவிடர் கழகம் எதிர்க்கிறது.

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், ஏற்கனவே கொடுத்த நிலங்களுக்கான தொகை அப்பகுதி மக்களிடம் சென்றடையவில்லை.

மீன்களில் ரசாயனம் கலந்தது எப்படி? என்பது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதற்கு முன்னுரிமை வழங்கி, தனது நேரடி கண்காணிப்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான அமைச்சர்கள் தொண்டர்கள் மத்தியில் அம்மா என்றும், தங்களுக்குள் பேசும்போது ஜெயலலிதா என்றும் பேசி ஜெயலலிதாவை அவமரியாதை செய்து வருகின்றனர்.

முட்டையில் ஊழல் செய்துள்ள வளர்மதி பற்றி பேசும் தினகரன் தான், வளர்மதிக்கு அந்த பதவியை பெற்று தந்தார். பாடநூல் கழக தலைவராக வளர்மதியை கொண்டு வந்தவர் தினகரன் தான். அண்ணா திராவிடர் கழகத்தில், புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அந்த வகையில் திருநங்கைகளுக்கான மாநில செயலாளராக திருநங்கை பாரதி கண்ணம்மா நியமிக்கப் பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story