கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 8:38 PM GMT)

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 9-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சீர்காழி,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 9-வது நாளாக சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.

பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கம்ப்யூட்டர் உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60 ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் உதவியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த வேலை நிறுத்தத்தையொட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), மேலாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி கிடந்தன. இந்த வேலை நிறுத்தத்தால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தேவையான உதவிகளை பெற முடியாமல் நேற்று 9-வது நாளாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

Next Story