கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 9:52 PM GMT)

தர்மபுரியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தெய்வானை பொறுப்பு செயலாளர் ஆறுமுகம், சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி ரகுபதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரூ.30 ஆயிரத்து 305 கோடியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மணல் தட்டுப்பாடு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அரசே மணல்குவாரிகளை அமைத்து 3 அடி ஆழம் மட்டுமே அள்ளி குறைந்த விலைக்கு மணலை வினியோகிக்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை, மானியத்துடன் கூடிய வீடுகள் வழங்க வேண்டும். அகில இந்திய கட்டிட கட்டுமான தொழிலாளர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். விபத்தில் கட்டுமான தொழிலாளிகள் இறந்தால் வாரிசுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், இயற்கை மரண நிவாரணமாக ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட அளவில் கட்டுமானதொழிலாளர் குறைகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை கட்டுமான தொழிலாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story