காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள்


காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள்
x
தினத்தந்தி 12 July 2018 9:00 PM GMT (Updated: 12 July 2018 2:55 PM GMT)

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடி, 

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள் நடத்தப்பட்டன.

கலை போட்டிகள் 

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தென்தமிழக கல்லூரிகளுக்கு இடையேயும், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயும் கலை, இலக்கிய போட்டிகள் கடந்த ஒருவார காலமாக நடந்து வந்தது.

பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் பரதநாட்டிய போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் நாட்டுப்புறக்குழு நடன போட்டியும் நடந்தது.

பரிசு 

பள்ளி மாணவர்களுக்கான பரத நாட்டிய போட்டியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி ரம்யா முதல் பரிசும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி மாணவி விஸ்மிதா 2–வது பரிசும், புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி மாணவர் அஸ்வந்த் கிறிஸ்டோ 3–வது பரிசும் பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் பிரீத்திவ் முதல் பரிசும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர் மணிகண்டன் 2–வது பரிசும், காமராஜ் கல்லூரியின் ஆர்த்திஸ்ரீ 3–வது பரிசும் பெற்றனர். நாட்டுப்புறக்குழு நடன போட்டியில் திருச்சிலுவை மனையியல் கல்லூரி குழுவினர் முதல் பரிசும், காமராஜ் கல்லூரி குழுவினர் 2–வது பரிசும், புனித மரியன்னை கல்லூரி குழுவினர் 3–வது பரிசும் பெற்றனர்.

பட்டிமன்றம் 

இன்று (வெள்ளிக்கிழமை) வணிகவியல் துறை தலைவர் காசிராஜன் தலைமையில், ‘பெருந்தலைவரின் பெரும்புகழுக்கு பெரிதும் காரணமாக இருப்பது கடமை உணர்வா? அல்லது கருணை உள்ளமா?’ என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் பி‌ஷப் கால்டுவெல் கல்லூரியின் உதவி பேராசிரியர் ராஜதுரை, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் இணை பேராசிரியர் ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

வருகிற 16–ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை தாவரவியல் துறை தலைவர் செந்தூர்பாண்டி தலைமையில் சிவபாக்கியம், முரளி, ராஜேசுவரி, பொன்னுத்தாய், அகிலா, சுபாஷினி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி தேவராஜ் ஆகியோர் செய்து உள்ளனர்.

Next Story