சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பால் வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பால் வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 10:06 PM GMT)

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பால் வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மைய்யா. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 25). பால் வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

பின்னர் அவரை ஓசூர் மற்றும் மாலூரில் உள்ள நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வெங்கடேசுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாபு ஆஜர் ஆனார். 

Next Story