மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடையில்லை


மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடையில்லை
x
தினத்தந்தி 13 July 2018 11:51 PM GMT (Updated: 13 July 2018 11:51 PM GMT)

மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை எதுவும் இல்லை என சட்டசபையில் மந்திரி ரவீந்திர சவான் கூறினார்.

மும்பை,

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் பல மடங்கு அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தியேட்டர் நிர்வாகங்கள் வெளியில் இருந்து உணவு பொருட்கள் எடுத்து செல்லவும் பொதுமக்களை அனுமதிப்பது இல்லை.

இதை கண்டித்து மராட்டியத்தில் நவநிர்மாண் சேனா கட்சி பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறது. மும்பை ஐகோர்ட்டும் இந்த விவகாரத்தில் அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது.

இந்தநிலையில் நேற்று சட்டமன்றத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குள் அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்வது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை மந்திரி ரவீந்திர சவான் கூறியதாவது:-

மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குள் பொதுமக்கள் உணவு பொருட்கள் எடுத்து செல்ல இனி எந்த தடையும் இல்லை. பொதுமக்களை வெளியில் இருந்து உணவு பொருட்கள் கொண்டு வர அனுமதிக்காத தியேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story