தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 July 2018 9:30 PM GMT (Updated: 14 July 2018 12:23 AM GMT)

விக்கிரவாண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி, 


விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). இவர் புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் புதுச்சேரி சிவராந்தகம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார்.

பின்னர் அங்கிருந்து நேற்று காலை தனது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story