வெண்ணாற்றில் கொட்டப்படும் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்


வெண்ணாற்றில் கொட்டப்படும் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
x
தினத்தந்தி 14 July 2018 10:45 PM GMT (Updated: 14 July 2018 8:49 PM GMT)

தஞ்சை பள்ளியக்ரகாரம் வெண்ணாற்றில் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாததால் மிகுந்த வேதனை அடைந்துள்ள பொதுமக்கள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பகிர்ந்து விடப்படும்.

இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் வெண்ணாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டம் வழியாக திருவாரூர், நாகை மாவட்டம் வரை செல்கிறது.

இந்த வெண்ணாற்றில் இருந்து தஞ்சை மாவட்டத்தில் 127 ஏ பிரிவு வாய்க்கால்களும், 806 பி பிரிவு வாய்க்கால்களும், 1,064 சி பிரிவு வாய்க்கால்களும், 526 டி பிரிவு வாய்க்கால்களும், 172 ஈ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 372 ஏ பிரிவு வாய்க்கால்களும், 2 ஆயிரத்து 359 பி பிரிவு வாய்க்கால்களும், 3,315 சி பிரிவு வாய்க்கால்களும், 1,540 டி பிரிவு வாய்க்கால்களும், 502 ஈ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. நாகை மாவட்டத்தில் 121 ஏ பிரிவு வாய்க்கால்களும், 707 பி பிரிவு வாய்க்கால்களும், 1012 சி பிரிவு வாய்க்கால்களும், 500 டி பிரிவு வாய்க்கால்களும், 163 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் இந்த வெண்ணாற்றில் தஞ்சையை அடுத்த பள்ளியக்ரகாரம் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள புல்வெளி பகுதியில் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் குவியல், குவியலாக காணப்படுகின்றன. மேலும் இதனை அந்த பகுதியில் உள்ள நாய்கள் சாப்பிடுவதுடன், கிளிறி விடுவதால் கோழி கழிவுகள் ஆற்றின் பல்வேறு பகுதிகளிலும் சிதறி காணப்படுகின்றன. பல மாதங்களாக இந்த கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

மேலும் இதன் அருகே தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் வெண்ணாறு நீரேற்று நிலையம் உள்ளது. குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இவ்வாறு தொடர்ந்து இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் இந்த இடத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் ஆற்றில் தண்ணீர் வரும் போது இந்த கழிவுகள் தண்ணீர் கலக்கும் நிலை ஏற்படும் போது அதனை பயன்படுத்துவதால் நோய் பரவும் சூழ்நிலையும் நிலவி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள பொதுமக்கள், அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வெண்ணாற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவ்வாறு கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இது போன்ற கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படும்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “வெண்ணாற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் கொள்ளிடத்தில் இருந்து வெண்ணாற்றின் கரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் வருவதற்காக குழாய் உள்ளது. இந்த குழாய் வெண்ணாற்றின் கரை அருகே கசிவு ஏற்பட்டுள்ளது.

காலை நேரங்களில் திருமானூரில் இருந்து நேற்று நிலையத்திற்கு தண்ணீர் வரும் போது இந்த கசிவு வழியாகவும் நீர் வெளியேறி வருகிறது. இதன் அருகேயும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் குழாயில் தண்ணீர் நின்றவுடன் கசிவு ஏற்பட்ட இடத்தில் தேங்கி இருந்த தண்ணீர் மீண்டும் உள்ளே செல்லும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குழாயில் கசிவு ஏற்பட்டதை உடனடியாக சரி செய்ய வேண்டும்”என்றனர். 

Next Story