சேத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சேத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 15 July 2018 10:30 PM GMT (Updated: 15 July 2018 7:22 PM GMT)

முருக்கன்குடி சேத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்துள்ள முருக்கன்குடியில் சேத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

அதை தொடர்ந்து நேற்று காலை சேத்துமாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 11.30 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேர் அசைந்து ஆடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று சேத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் தேர் மாலை 3 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் கீழப்புலியூர், சிறுமத்தூர், பெருமத்தூர், முருக்கன்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மங்களமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Next Story