3 ஏரிகள் ரூ.72 லட்சம் செலவில் புனரமைக்கும் பணி அரசு செயலாளர் நேரில் ஆய்வு


3 ஏரிகள் ரூ.72 லட்சம் செலவில் புனரமைக்கும் பணி அரசு செயலாளர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2018 10:45 PM GMT (Updated: 17 July 2018 7:08 PM GMT)

பரமத்திவேலூர் பகுதியில் 3 ஏரிகள் ரூ.72 லட்சம் செலவில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை அரசு செயலாளர் ஆசிஷ் வச்சானி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், ஏரிகள், குளங்களை தூர்வாரவும், விவசாய நிலத்திற்கு ஏரிகளில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை பயன்படுத்தி நன்கு விவசாயம் செய்யவும், குடிமராமத்து திட்டத்தை அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 23 ஏரிகளை புனரமைக்க ரூ.737.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரமத்திவேலூர் வட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பிராந்தகம் ஏரி அமைந்துள்ளது. பிராந்தகம் ஏரியின் கலிங்கு மற்றும் மதகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் மதகில் நீர் கசிவு ஏற்பட்டு ஏரியில் நீர்தேக்க இயலவில்லை. மேலும் ஏரியின் கரை சீமைக்கருவேல மரங்கள், முட்செடிகள் வளர்ந்து பலம் இழந்துள்ளது. கால்வாய் முட்புதர்கள் அடர்ந்து இருப்பதால் நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரி புனரமைப்பு மற்றும் கால்வாய் சீரமைக்கும் பணிகள் ரூ.17 லட்சம் மதிப்பில் விவசாயிகள் பங்களிப்புடன் பிராந்தகம் ஏரி நீர் பாசன விவசாயிகள் சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவடைந்தால், 65.48 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதே போல் இருட்டணை ஏரியின் கலிங்கு மற்றும் மதகு பழுதடைந்த நிலையில் உள்ளதால் மதகில் நீர் கசிவு ஏற்பட்டு ஏரியில் நீர்தேக்க முடியாத சூழல் உள்ளது. இருட்டணை ஏரி மற்றும் கால்வாய் புரனமைக்கும் பணிக்கு ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகள் பங்களிப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்தால் 84.34 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் ஏளுர் ஏரி ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகள் பங்களிப்புடன் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பிராந்தகம், இருட்டணை, ஏளுர் ஆகிய 3 ஏரிகளும் மொத்தம் ரூ.72 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. இந்த புனரமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு செயலாளரும் (குடிமராமத்து திட்டப்பணிகள்), நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆசிஷ் வச்சானி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவுதமன் உள்பட தாசில்தார்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர். 

Next Story