சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேட்டி


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 9:58 PM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம்,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சியில் 12 ஆண்டுகளாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சாலைகள் பழுதடைந்தது மட்டுமல்லாமல் குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. மேட்டூர் உபரிநீர் திட்டம், தோணி மடுவு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற கோரி 40 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைப்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளார். இந்த திட்டம் தொடர்பாக அவர் தொடர்ந்து பொய் கூறி வருகிறார். 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த பயனும் கிடையாது. இதற்காக விவசாயிகள் யாரும் நிலத்தை ஒப்படைக்க விரும்பவில்லை. முக்கியமாக இந்த 8 வழிச்சாலை எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டிய நிறுவனங்கள் வழியாக செல்லவில்லை.

8 வழி பசுமை சாலை திட்டத்தை முதல்-அமைச்சர் கைவிடவேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக இதை அணுக இருக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் பசுமை சாலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பற்றி அவருக்கு சரியாக தெரியாது. சிஸ்டம் சரியில்லை என்று கூறிய அவர், முதல்-அமைச்சருக்கு நல்ல மார்க் போட்டுவிடுவார் என தெரிகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை வழியாக 8 வழிச்சாலை அமைக்க வேண்டும். இதனால் தமிழகம் வளம் பெறுவதுடன் மட்டுமல்லாமல் தென்மாவட்டம் வளர்ச்சி அடையும். இந்த திட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும். கர்நாடக மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பிவிடும் என்று தெரிந்தவுடன் அதை உடனடியாக திறந்திருக்கலாம்.

ஆனால் கரையோரங்களில் மணலை ஒதுக்கி வைத்துக் கொண்டு அவற்றை கொள்ளையடிப்பதற்காக அணையை திறக்க காலம் தாமதம் செய்கின்றனர். என்ஜினீயரே அணையில் இருந்து தண்ணீரை திறந்திருக்கலாம். தமிழகம் கடனில் தத்தளிக்கிறது. இப்படியே போனால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் திவாலாகிவிடும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார். இதனால் அவருடைய உறவினர்களுக்கே பெரும்பாலான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று கேட்கும் போது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது. மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் இந்த வழக்கை விரைவில் முடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

உடல் உறுப்புகள் இங்குள்ளவர்களுக்கு பொருத்தாமல் வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுத்து பொருத்தப்படுகிறது. இதற்காக ரூ.12 கோடி வரை லஞ்சம் கைமாறுகிறது. முட்டை கொள்முதல் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர்கள் அருள், குணசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story