லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்


லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 10:19 PM GMT)

நாடு முழுவதும் நாளை தொடங்க உள்ள லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாமக்கல்,

டீசல் விலையை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கதலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இதை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செலுத்தும் நடைமுறையை அறிவிக்கவேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதை குறைக்கவேண்டும்.

இதேபோல் வருமான வரியாக 10 டன் எடையேற்றும் ஒரு லாரிக்கு ஆண்டுக்கு ரூ.1.95 லட்சம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டீசல் விலை குறைப்பு, சுங்க கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து லாரி உரிமையாளர்கள் கடந்த 3 மாதங்களாக பலமுறை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் வேறு வழிஇல்லாமல் 20-ந் தேதி (நாளை) முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி நாமக்கல் தாலுகாவில் உள்ள 25 ஆயிரம் லாரிகளும் இயக்கப்பட மாட்டாது. இதுதவிர எங்களின் போராட்டத்துக்கு எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர் சங்கம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த போராட்டத்துக்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்கவேண்டும். அதன்படி வருகிற 22-ந் தேதி அனைத்து தரப்பினரும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவிதமான வாகனங்களையும் இயக்காமல் நிறுத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் கூறியதாவது:- சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வசூலிக்கும் நடைமுறையை அறிவிக்கவேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எங்களுக்கும் பொருந்தும். இதனால் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு அளிக்கிறோம். மேலும் போராட்டத்துக்கு ஆதரவாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் டேங்கர் லாரிகளை இயக்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நாமக்கல் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story