விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 19 July 2018 11:30 PM GMT (Updated: 19 July 2018 6:45 PM GMT)

முதல்-அமைச்சர் அறிவித்தபடி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வழங்க வேண்டும் என்றும், தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்றும் கடந்த 2008-ம் ஆண்டே அப்போதைய விருதுநகர் எம்.எல்.ஏ.வாக இருந்த வரதராஜன் சட்டசபையில் வலியுறுத்தினார். அதன் பின்னர் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. ஆனாலும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி கிடைக்காமல் இருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்து தரப்படும் என அறிவித்தார்.


அதன்பேரில் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.4½கோடி மதிப்புள்ள அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை ஒதுக்கீடு செய்தது. கடந்த வாரம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் லாரிகளில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாரிகளில் ஸ்கேன் எந்திரம் வரும் தகவல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தும் அந்த எந்திரத்தை ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் இறக்கி வைக்க போதிய ஏற்பாடுகள் செய்யாததால் 4 நாட்களுக்கு மேல் அந்த எந்திரம் லாரிகளிலேயே இருந்தது. அதன் பின்னர் தான் எந்திரம் லாரிகளில் இருந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.1¼ கோடி மதிப்புள்ள அதிநவீன சிடி ஸ்கேன் எந்திரம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆக கார் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டு பல முறை சுட்டிக்காட்டிய பின்னர் அந்த எந்திரத்தை உரிய முறையில் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 2 தினங்களுக்கு முன்னர் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் சிடி ஸ்கேன் எந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் உள்ளது. எந்திரம் வைப்பதற்கான அறை தயாராகவில்லை என்ற காரணம் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி முதல்-அமைச்சர் அறிவித்தபடி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி உடனடியாக செய்து தரப்பட அந்த எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஏனெனில் சிடி ஸ்கேன் எந்திரத்துக்கான மின் இணைப்பு கிடைப்பதற்கு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் முயற்சிகள் ஏதும் செய்யாத நிலையில் மின்வாரிய அதிகாரிகள் விதிமுறையை தளர்த்தி அதற்கான மின் இணைப்பை கொடுக்க ஏற்பாடுகள் செய்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் பயன்பாட்டிற்கு வர அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மின்வாரியம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story