மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று இரவுக்குள் திருச்சி முக்கொம்பு வந்தடையும்


மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று இரவுக்குள் திருச்சி முக்கொம்பு வந்தடையும்
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 8:02 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று இரவுக்குள் திருச்சி முக்கொம்பு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22-ந்தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

திருச்சி,

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல்சாகுபடி பணியை தொடங்குவதற்காக அணையில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தண்ணீரை திறந்து விட்டார். முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று இரவு 12 மணிக்கு பின்னர் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சியை நோக்கி காவிரி நீர் புதுவெள்ளமாக சீறிப்பாய்ந்து வருகிறது.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை மேட்டூர் அணையில் இருந்து 85-வது மைலில் உள்ளது. மாயனூருக்கு இன்று மாலை வரும் தண்ணீர் நள்ளிரவுக்குள் 110- வது மைலில் உள்ள திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்து விடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 21-ந்தேதி காலை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையை அடையும் காவிரி நீர் இரவுக்குள் கல்லணையை சென்றடையும். கல்லணையில் இருந்து 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்டா மாவட்ட பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி ஜூலை மாதம் 19-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு குறுவை பயிர் சாகுபடி செய்ய முடியாமல் போய்விட்டாலும் சம்பா சாகுபடியையாவது தொடங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என கருதி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடிவருவதால் திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படியும், தண்ணீர் வரும்போது பொதுமக்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதை தவிர்க்கும்படியும் திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Next Story