ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க அரசு திட்டம் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க அரசு திட்டம் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 9:30 PM GMT)

ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். ஒகேனக்கல் அருவிகளுக்கு செல்லும் நடைபாதை, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகள், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். அப்போது வெள்ளப்பெருக்கினால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். உதவி கலெக்டர் சிவன்அருள், தாசில்தார்அழகு சுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் விழுந்துள்ள மரங்கள், செடி,கொடிகளை அகற்றி சீரமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் எதிர்வரும் 4 நாட்களுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உருவாகிறது. இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக ஒரு செயற்கை நீர்வீழ்ச்சியை ஒகேனக்கல்லில் உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. வருகிற ஆடிப்பெருக்கு விழா எந்த மாற்றமும் இல்லாமல் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இந்த ஆய்வின்போது முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சுப்பிரமணியன், பாபு, சங்கர், கூட்டுறவு வங்கி தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், கிருஷ்ணன், கூத்தப்பாடி முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி மற்றும் பலர் உடனிருந்தனர். 

Next Story