அஞ்செட்டி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய பாறை கண்டுபிடிப்பு


அஞ்செட்டி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய பாறை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 9:47 PM GMT)

அஞ்செட்டி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இசை எழுப்பும் அதிசய பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் பரந்தாமன், அன்பரசன், சுகவனமுருகன் ஆகியோர் அஞ்செட்டி அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்கள் வழிபாட்டிற்கு சடங்கு இசை எழுப்ப பயன்படுத்திய அதிசய பெருங்கற்கால பாறையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இசை எழுப்பும் பாறை 4 அடி அகலமும், 3 அடி உயரமும், சுமார் 2 டன் எடையும் உள்ளது. இந்த பாறாங்கல் சுமார் 30 டன் எடையுள்ள பாறையின் மீது வைக்கப்பட்டுள்ளது என தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், கற்திட்டைகளின் மீதுள்ள கோப்பை குழிகள் 98-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இப்பாறையில் பல்லாங்குழி போல் தோண்டியுள்ளனர். தொல்லியல் ஆய்வாளர் பரந்தாமன் இப்பாறையின் மீதுள்ள குழிகளை ஆய்வாளர் அன்பரசனுடன் அறிவியல் முறைப்படி அலகிட்டு அளந்துள்ளார்.

கல்லொன்றை கொண்டு இக்குழிகளை தட்டும் போது உலோகத்தினை தட்டினால் ஏற்படுவது போன்று இசை எழுப்புகிறது. ஒலிச்சேர்க்கையில் ஏழுவித சப்தங்கள் உண்டாகிறது. இந்த அதிசய பாறாங்கல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகில் உள்ள மிலிதிகி என்ற கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலையில் அமைந்துள்ளது.

இது குறித்து நாங்கள் கொல்கத்தாவை சேர்ந்த தொல்லியல் அறிஞர் சுபாஷிதாசிடம் தெரிவித்தோம். இந்த பாறையை உற்று கவனித்தால் சில குழிகள் அரிந்திருப்பதை அறிய முடியும். ஆனால் பாறையின் மெருகு குறையாமல் இருக்கிறது. இவ்வகையான பாறைகள் பெருங்கற்கால வளமை சார்ந்த பெண் தெய்வ வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கல்லே வழிப்பாட்டிற்குரிய தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கலாம். இக்குழிகள் இரும்பு மற்றும் செம்பு காலத்திற்கும் முற்பட்டது என கருதுகிறேன்.

வருடத்திற்கு ஒருமுறை இப்பகுதியில் வாழும் குரும்பர் இன மக்கள் இப்பாறைக்கு பூஜை செய்து வழிபட்டு வருவதுடன் தொட்டம்மா என்று வழங்கி வருவதும் அவரின் கருத்தை உறுதி செய்துள்ளன என்றார். அறிஞர் ஸ்ரீகுமார் மேனன் கூறுகையில் மிகமுக்கியமான பெருங்கற்கால சின்னம் என்றார். கர்நாடகா ஹம்பி பகுதியில் இது போல் ஒரு பாறாங்கல் இருப்பதாகவும், அது மிகவும் சிறியது என்றார்.

இந்த இசைப்பாறாங்கல் இருக்கும் பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கற்திட்டைகளும், கல்வட்டங்களும் உள்ளன. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், சிதைந்த புதிர்நிலை ஒன்றும், இதன் அருகில் இருப்பதும் கானாறு ஒன்றின் கரையில் இப்பாறாங்கல் இருப்பதும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இப்பகுதியில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் இக்கால கணிப்பை நிர்ணயம் செய்ய உதவின.

மேலும் இது போன்ற ஆய்வுகளை தொடர வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மனோகரன் தொடர்ந்து ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story