நெல்லையில் ம.தி.மு.க. சார்பில் பேச்சுப்போட்டி முதல் 3 பரிசுகளையும் மாணவிகள் பெற்றனர்


நெல்லையில் ம.தி.மு.க. சார்பில் பேச்சுப்போட்டி முதல் 3 பரிசுகளையும் மாணவிகள் பெற்றனர்
x
தினத்தந்தி 21 July 2018 10:00 PM GMT (Updated: 21 July 2018 6:44 PM GMT)

நெல்லையில் ம.தி.மு.க. சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் 3 பரிசுகளையும் மாணவிகள் பெற்றனர்.

நெல்லை, 

நெல்லையில் ம.தி.மு.க. சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் 3 பரிசுகளையும் மாணவிகள் பெற்றனர்.

பேச்சு போட்டி

நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. பெரியார்–அண்ணா என்ற தலைப்பில் இந்த பேச்சுப்போட்டி நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மாரிச்சாமி வரவேற்று பேசினார்.

இதில் 30 கல்லூரிகளை சேர்ந்த 60 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். செல்லப்பா, உஷாராணி, ராம.பூதத்தான் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

மாணவிகள் வெற்றி

இந்த போட்டியில், கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. கல்வியியல் கல்லூரி மாணவி ஜெபமெர்சி முதலிடத்தையும், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி மாணவி கார்த்திகா 2–வது இடத்தையும், சோலைச்சேரி மகாத்மா காந்தி கல்லூரி மாணவி ஜெயலட்சுமி 3–வது இடத்தையும் பிடித்தனர். இதுதவிர குற்றாலம் பாரசக்தி கல்லூரியை சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி இசக்கியம்மாள் சிறப்பு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12–ந்தேதி நெல்லையில் நடைபெறும் மண்டல போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ரைமண்ட், இலக்கிய அணி தலைவர் மதுரா, துணை செயலாளர் வேலம்மாள், மாணவர் அணி பினேகாஷ், வக்கீல் சுதர்சன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story