உதவித்தொகை நிறுத்தப்பட்ட முதியோர்கள் எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்


உதவித்தொகை நிறுத்தப்பட்ட முதியோர்கள் எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 21 July 2018 11:00 PM GMT (Updated: 21 July 2018 8:06 PM GMT)

அரக்கோணம் அருகே உதவித்தொகை நிறுத்தப்பட்ட முதியோர்கள் எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம்,

அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட முள்வாய், ஆணைப்பாக்கம், கோணலம், வேலூர்பேட்டை, கீழ்பாக்கம், காவனூர் ஆகிய 6 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடந்தது. வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மதிவாணன், வட்ட வழங்கல் அலுவலர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் வரவேற்றார்.

ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைகேட்பு கூட்டத்திற்கு சென்ற எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி, மின் வசதி, தார்சாலை உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர். சில கிராமங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளதை கண்டித்து எம்.எல்.ஏ.விடம், முதியோர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முள்வாய், ஆணைப்பாக்கம், கோணலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு எம்.எல்.ஏ.விடம் மனுக்கள் கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட சு.ரவி எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி வாய்ந்த முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி ஏ.எம்.நாகராஜன், கட்சி நிர்வாகிகள் ஏ.பி.எஸ்.லோகநாதன், கணேசன், பி.பரந்தாமன், கிருஷ்ணசாமி, மாசிலாமணி, ஆனந்தன், ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story