துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டுயானைக்கு தீவிர சிகிச்சை


துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டுயானைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 28 July 2018 12:07 AM GMT (Updated: 28 July 2018 12:07 AM GMT)

குஷால் நகர் அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டுயானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடகு,

யானையை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குடகு மாவட்டம் குஷால் நகர் அருகே ஆனேக்காடு கிராமத்திற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு காட்டுயானை புகுந்தது. அது அங்குள்ள ஒரு காபித்தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த யாரோ ஒரு மர்ம நபர், துப்பாக்கியால் யானையை நோக்கி சுட்டார். இதில் யானையின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அந்த யானை அங்கேயே சுருண்டு விழுந்து துடிதுடித்தது.

இதையடுத்து அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் கால்நடை டாக்டருடன் விரைந்து வந்து மயக்க ஊசி செலுத்தி யானைக்கு சிகிச்சை அளித்தனர். அதனால் அந்த யானையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்தது.

இதையடுத்து அந்த யானை தானாக எழுந்து நின்றது. அதையடுத்து வனத்துறையினரும், கால்நடை டாக்டரும் சேர்ந்து சங்கிலியால் யானையை ஒரு மரத்தில் கட்டி தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அந்த யானை காலில் அதிகப்படியான வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த யானை மீண்டும் துடித்தது. இதையடுத்து அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அந்த யானையை லாரி மூலம், யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினரும், கால்நடை டாக்டரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து யானையை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். 

Next Story