பண்ருட்டி தொழில் அதிபரிடம் ரூ.39 லட்சம் மோசடி


பண்ருட்டி தொழில் அதிபரிடம் ரூ.39 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 31 July 2018 10:00 PM GMT (Updated: 31 July 2018 7:38 PM GMT)

பண்ருட்டி தொழில் அதிபரிடம் வாங்கிய ரூ.39 லட்சத்தை திருப்பி தராமல் மோசடி செய்த பள்ளி தாளாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பண்ருட்டி,


பண்ருட்டி போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(வயது 58). தொழில் அதிபரான இவர், நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளிக்கூடத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய உறவினர் சார்லஸ்ராஜ்(50). புதுச்சேரி மூகாம்பிகை நகரை சேர்ந்த சார்லஸ்ராஜ், முருங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தாளாளராக உள்ளார்.

ஆரோக்கியதாசுக்கும், சார்லஸ்ராஜிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஆரோக்கியதாஸ் தவணை முறையில் ரூ.39 லட்சத்தை சார்லஸ்ராஜியிடம் கொடுத்துள்ளார்.

ஆண்டுகள் கடந்தபோதிலும் அந்த பணத்தை அவர் திருப்பிக்கொடுக்கவில்லை. ஆரோக்கியதாஸ் பணத்தை கேட்டபோதெல்லாம் சார்லஸ்ராஜ் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இது குறித்து ஆரோக்கியதாஸ் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சார்லஸ்ராஜ் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரின் பேரில் சார்லஸ்ராஜ் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Next Story