வாணியம்பாடி அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு; ஒருவர் கைது


வாணியம்பாடி அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 10:36 PM GMT (Updated: 1 Aug 2018 10:36 PM GMT)

வாணியம்பாடி அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தொழிற்சாலையில் எரிசாராயம் மற்றும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் டாஸ்மாக் மது விற்பனை, முன்பு இருந்ததை விட குறைந்து வந்ததாக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. சிலர் போலி மது தயாரித்து விற்பதே இதற்கு காரணம் என புகார்களும் வந்தன. கடந்த வாரம் குடியாத்தம் அருகே கே.வி.குப்பம் பெருமாள்கோவில் தெருவில் நடந்த சோதனையில் டாஸ்மாக் மதுவில் தண்ணீரை கலந்து போலி மது தயாரித்த டாஸ்மாக் ஊழியர் உள்பட 2 பேர் சிக்கினர்.

அங்கு கலப்பட மதுபாட்டில்கள் மற்றும் அந்த பாட்டில்களுக்கு மூடி பொருத்தும் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள கூவல்குட்டை என்ற மலைப்பகுதியில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு எரிசாராயத்தை (ஸ்பிரிட்) பயன்படுத்தி மதுபாட்டில்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மது தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட எரிசாராய கேன்கள், மூடி பொருத்தும் எந்திரங்கள், போலி மதுபாட்டில்கள், காலி பாட்டில்கள் ஆகியவற்றை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளகுட்டை பகுதியை சேர்ந்த சங்கர் (40) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சோதனை நடத்தப்படும் எனவும் மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story