நாகர்கோவிலில் பட்டதாரி– முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு


நாகர்கோவிலில் பட்டதாரி– முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு
x
தினத்தந்தி 2 Aug 2018 10:30 PM GMT (Updated: 2 Aug 2018 3:29 PM GMT)

நாகர்கோவிலில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு முதன்மை கல்வி அதிகாரி பாலா முன்னிலையில் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் விருப்பப்படும் முதுகலை ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நேற்று நடந்தது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள 15 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று காலையில் தொடங்கியது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்க 33 முதுகலை ஆசிரியர்களும், 22 பட்டதாரி ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. மாலைக்குள் 15 ஆசிரிய, ஆசிரியைகள் குமரி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிருந்தா, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி அலுவலர் பாக்கியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெளிமாவட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்வதற்காக 15–க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருந்தனர். இதனால் மாலைக்கு பிறகும் கலந்தாய்வு தொடர்ந்து நடந்தது.

இந்த கலந்தாய்வின் காரணமாக நேற்று காலையில் இருந்து இரவு வரை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story