நாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 2 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


நாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 2 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2018 11:00 PM GMT (Updated: 2 Aug 2018 4:13 PM GMT)

நாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 3 மாதங்களுக்கு மேல் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்க நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்த ஒருவர் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி வருவாய் அதிகாரி குமார்சிங், ஆய்வாளர் சுப்பையன், இசக்கி சரவணன் உள்ளிட்டோர் நேற்று அண்ணா பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த டீக்கடையை பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் வடசேரி பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்த ஒருவர் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த கடைக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, டீக்கடைக்காரர் சில மணி நேரங்களில் வாடகை பாக்கியை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தியதை தொடர்ந்து ‘சீல்‘ அகற்றப்பட்டது.

இதேபோல் கணேசபுரம் பகுதியில் 2 கடைக்காரர்களும், சரலூர் பகுதியில் 2 கடைக்காரர்களும் வாடகை பாக்கி வைத்திருந்தனர். ஆனால் அவர்களும் வாடகை பாக்கியை செலுத்தியதை தொடர்ந்து சீல் வைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

மேலும் நகராட்சி வாடகை கடைகளுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே வாடகையை நிலுவையின்றி கடைக்காரர்கள் செலுத்த முன்வர வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Next Story