தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உடந்தையா? திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உடந்தையா? திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2018 11:15 PM GMT (Updated: 5 Aug 2018 7:32 PM GMT)

தங்கம் கடத்தல் தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். சிங்கப்பூரில் இருந்து வந்த 70 பயணிகளையும் மடக்கினர்.

செம்பட்டு,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூருக்கு மட்டும் ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு தனியார் விமான நிறுவனம் ஆகியவை தினமும் இரண்டு விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து வந்து தரை இறங்கியது. அந்த விமானத்தில் மொத்தம் 70 பயணிகள் இருந்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் அவர்களது பாஸ்போர்ட்டு, குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர். அப்போது அங்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அப்படியே மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து இறங்கிய மற்ற பயணிகளையும் வெளியே விடாமல் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகள் 70 பேரையும் வெளியே விடாமல் சி.பி.ஐ. அதிகாரிகள் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள பயணிகளின் பெயர் விவரம், அவர்களை சுற்றி வளைத்து திடீர் என விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கான காரணம் எதனையும் அதிகாரிகள் வெளியிட வில்லை. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கியதா? என்றும் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாகவே சிங்கப்பூரில் இருந்த வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்க கட்டிகள், நட்சத்திர ஆமை ஆகியவை சிக்கி உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 6½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று காலை மலேசிய விமான பயணிகளிடம் இருந்து ஆமை குஞ்சுகள், பாம்பு, தேள், பச்சோந்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் தான் தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரையில் இருந்து நேரடியாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்து 70 பயணிகளிடம் அதிரடி விசாரணை மற்றும் சோதனை நடத்தி உள்ளனர். சி.பி.ஐ. குழுவில் துணை சூப்பிரண்டு நிலையிலான ஒரு அதிகாரி, 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர். நேற்று மாலை பணியில் இருந்த சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா விமானங்களின் மூலம் தொடர்ந்து தங்கம் கடத்தி வரப்பட்டது, தடை செய்யப்பட்ட ஆமை உள்ளிட்ட வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய 70 பயணிகளில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆவார்கள். இரவு 8 மணி வரை அவர்கள் வெளியே விடப்படவில்லை. 

Next Story