திருமானூர் அருகே அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலி 27 பேர் காயம்


திருமானூர் அருகே அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலி 27 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:00 PM GMT (Updated: 5 Aug 2018 7:35 PM GMT)

திருமானூர் அருகே அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் பலியானார். 27 பேர் காயம் அடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்துள்ள க.பரதூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் போலீசாரின் அனுமதியின்றி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி, கிராமத்தின் மெயின் ரோட்டில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் திருப்பெயரை சேர்ந்த சக்திவேல் (வயது 32), நத்தம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (18), கரைவெட்டி கணேசன் (32), வல்லம் கோவிந்தன் (35), சாத்தமங்கலம் தமிழ்ச்செல்வன் (38), இருங்களூர் தவமணி (24), திருமழப்பாடி சின்னப்பா (52) உள்பட 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சக்திவேல் உள்பட படுகாயம் அடைந்த 9 பேரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் படுகாயம் அடைந்த திருமழப்பாடியை சேர்ந்த சின்னப்பா தான் வளர்த்து வரும் காளையை இந்த போட்டிக்கு கொண்டு வந்திருந்தார். போட்டியில் அவரது காளை அவிழ்த்து விடப்பட்ட பின் அதனை கயிறு போட்டு பிடிக்க காளைகள் ஓடும் வழித்தடத்தின் நிறைவு பகுதியில் கயிற்றுடன் நின்றிருந்தார். அப்போது, அவிழ்த்துவிடப்பட்ட வேறொரு ஜல்லிக்கட்டு காளை திடீரென சின்னப்பாவை முட்டித்தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த சின்னப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சின்னப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், கட்டில், நாற்காலிகள், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story