நாகர்கோவிலில் போலீசாருடன் தகராறு செய்த தொழில் அதிபர் மகன் கைது


நாகர்கோவிலில் போலீசாருடன் தகராறு செய்த தொழில் அதிபர் மகன் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 11:15 PM GMT (Updated: 5 Aug 2018 7:54 PM GMT)

நாகர்கோவிலில் போலீசாருடன் தகராறு செய்த தொழில் அதிபர் மகனை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு எப்போதும் பரபரப்பாக இருக்கும். இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அதை சரிசெய்ய போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைப்பார்கள். இதனால் கலெக்டர் அலுவலக சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக சந்திப்பில் தெற்கு பகுதி நோக்கி வாகனங்கள் சென்றதால் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீசாரை இடிப்பது போல நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை தட்டிக் கேட்டனர். ஆனால் வாலிபர் திடீரென போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதோடு, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் அந்த வாலிபரை தடுக்க முயன்றார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யரையும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர் களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் குமரி காலனியை சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 32) என்பது தெரியவந்தது. ஸ்ரீநாத், பிரபல தொழில் அதிபரின் மகன் ஆவார். இதனையடுத்து போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஸ்ரீநாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story