நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி 89 லட்சமாக சரிவு பண்ணையாளர்கள் கவலை


நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி 89 லட்சமாக சரிவு பண்ணையாளர்கள் கவலை
x
தினத்தந்தி 5 Aug 2018 10:45 PM GMT (Updated: 5 Aug 2018 8:04 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 89 லட்சமாக சரிவடைந்து உள்ளதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள்ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த முட்டைகள் கேரளாவுக்கு 90 லட்சம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு 50 லட்சம், வெளிநாடுகளுக்கு 40 லட்சம் என அனுப்பப்பட்டு வந்தன. இதர முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

தற்போதும் இதே நடைமுறை நீடித்தாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முட்டையின் அளவு நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி நாமக்கல் மண்டலத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 2 கோடியே 3 லட்சம் முட்டைகளும், மே மாதம் 1 கோடியே 27 லட்சம் முட்டைகளும், ஜூன் மாதம் 1 கோடியே 8 லட்சம் முட்டைகளும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது கடந்த மாதம் (ஜூலை) 89 லட்சமாக சரிவடைந்து உள்ளது. அதாவது ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது கடந்த மாதம் 19 லட்சம் முட்டைகள் குறைவாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுவரை கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த முட்டைகளின் எண்ணிக்கை தற்போது 89 லட்சமாக மாறி இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் முட்டை ஏற்றுமதியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த மாதம் இந்தியாவில் முட்டை விலை அதிகரித்து காணப்பட்டதும், ஏற்றுமதி குறைய ஒரு காரணம் என கூறப்படுகிறது. 

Next Story