பழனி அருகே பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி


பழனி அருகே பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
x
தினத்தந்தி 5 Aug 2018 9:45 PM GMT (Updated: 5 Aug 2018 8:30 PM GMT)

பழனி அருகே, மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள்.

பழனி, 



பழனியை அடுத்த கோதைமங்கலம் ஊராட்சி பெரும்பாறை 7-வது வார்டை சேர்ந்தவர் நாகராஜ். கட்டிட தொழிலாளி. அவருடைய மகள் அனுஸ்ரீ (வயது 4). இவள் பழனி-தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவளை பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாகராஜ் சேர்த்தார். அங்கு அனுஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமடையவில்லை.

இதற்கிடையே நேற்று சிறுமிக்கு வயிற்றுப்போக்கும், வயிற்றுவலியும் ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக மாறியது. இதையடுத்து பழனி அரசு மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவள் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது.

இதையறிந்த பெற்றோர் மகளை இழந்த துக்கத்தில் அலறி துடித்தனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story